Friday 27 April 2012

கணிப்பொறியின் வரலாறு

கணிப்பொறியின் வரலாறு:
·         கி.மு. 2500 – அபாகஸ்:-
            எண் கணிதத்திற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கருவி அபாகஸ் எனலாம். இதில் நூலிழைகளும், அவற்றில் மணிகளும் இருக்கும். ஒவ்வொரு இழையும் ஒரு பதின்ம (தசம) நிலையையும், ஒவ்வொரு மணியும் ஒரு பதின்ம இலக்கத்தையும் குறிக்கும். நடுவில் உள்ள சட்டத்தின் அருகில் உள்ள மணிகள் ஒரு எண்ணைக் குறிக்கும். முதலில் அபாகஸ் கூட்டலுக்கும் கழித்தலுக்கும் பயன்பட்டது. பின்னர்  பெருக்கலுக்கும், வகுத்தலுக்கும் விரிவாக்கப்பட்டது.
·         கி.பி. 1614 - நேப்பியர் குச்சிகள்:-
            பெருக்கலை விரைவாகச் செய்ய உதவும் சாதனம் இது. ஜான் நேப்பியர் (John Napier) என்னும் ஸ்காட்லாந்துக்காரரால் உருவாக்கப்பட்டது. இதில் ஒவ்வொரு இலக்கத்திற்கும் ஒரு குச்சி இருக்கும். இந்தக் குச்சிகளை தேவையான பெருக்கலுக்கு ஏற்றது போல் அடுக்கி வைத்தால் பெருக்கலை விரைவாகச் செய்யலாம்.
·         கி.பி.1633 – நகரும் சட்டம்:-
            “வில்லியம் ஆட்ரெட்” (William Outhtned) என்பவர் இதனை உருவாக்கினார். இதனை ‘லாகரிதம்’ (Logarithm) என்பதன் அடிப்படையில் செயல்படுகிறது. இதன் இருபுறங்களில்  நிலைத்த சட்டங்களும், நடுவில் ஒரு நகரும் சட்டமும் உள்ளது. இதனை பயன்படுத்தி பெருக்கலையும், வகுத்தலையும், கூட்டல், கழித்தல் போன்று செய்யலாம்.
·         கி.பி. 1642 – சுழல் சக்கரக் கணிப்பான்:-
            இது “பிளேய்ஸ் பாஸ்கல்” (Blaise Pascal)  என்னும் பிரெஞ்சு அறிஞரால் வடிவமைக்கப்பட்டது. இன்றைய கணிப்பொறிக்கு முன்னோடி எனலாம். இதில் நெம்பிகளும் வேகமாற்றிகளும் (Levers and Gears) இருந்தன. தன் தந்தையின் கணிப்புகளை விரைவுபடுத்த பாஸ்கல் இதை உருவாக்கினார். அப்போது அவருக்கு வயது பத்தொன்பதுதான்.
·         கி.பி. 1822 – டிஃபரன்ஸ் என்ஜீன்:-
            இது “சார்லஸ் பாபேஜ்” (Charles Babbage)  என்னும் ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது. இவர் கணிதம் மற்றும் பொறியியல் துறைகளில் அறிஞர். இன்றைய கணிப்பொறியின் அடிப்படைத் தத்துவங்களைத் உருவாக்கியதால் இன்றைய கணிப்பொறியின் தந்தை என்று போற்றப்படுகிறார்.
·         கி. பி. 1890 – ஹோல்ரித் டேபுலேடிங் மிஷின்
            துளையிடப்பட்ட அட்டைகளைப் பார்த்து அவற்றில் உள்ள தகவல்களைப் படித்து, அவற்றை அலசி ஆராயும் தன்மை படைத்தது இந்தக் கருவி.